காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் நந்தவனத்தில் பெருமாள் வீற்றிருக்கும் வகையில், வசந்த உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வசந்த உத்ஸவம் மற்றும் கோடை திருமஞ்சனப் பெருவிழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தாயார் சன்னிதி எதிரே செயற்கையாக அமைக்கப்பட்ட நந்தவனத்தின் நடுவே ஸ்ரீதேவி பூதேவியாருடன் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் வீற்றிருந்தார். அக்னி நட்சத்திர காலம் மற்றும் தொடரும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையிலான பிரார்த்தனையாக வசந்த உத்ஸவம் நடத்தப்படுவதையொட்டி, பெருமாளுக்கு மூலிகை எண்ணெய் சாற்றப்பட்டு, பன்னீரில் கரைத்த குங்குமப்பூ பெருமாள் உடலின் மீது தடவப்பட்டது. மூலிகை, வாசனை திரவியங்கள் கலந்த தூய சந்தனம், பெருமாளின் திருமார்பிலும், கை மற்றும் நெற்றிப் பகுதியிலும் பூசப்பட்டது. பெருமாளுக்கு வெட்டிவேர் மூலம் தயார் செய்யப்பட்ட கிரீடம் அணிவிக்கப்பட்டது. கிரீடத்தில் உலர் பழ வகைகள் பதிக்கப்பட்டிருந்தது.
இதேபோல உபயநாச்சியார்களுக்கும் கை, நெற்றிப் பகுதியில் பூசப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய், சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உபயதாரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். திருமஞ்சன நாள்: இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை கோயிலில் மூலவராக சயன நிலையில் வீற்றிருக்கும் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. காலை 10 முதல் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோடை வெப்பம் தணியும் நோக்கிலும், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் தணியவும் பெருமாளுக்கு இவ்வகையான வழிபாடு பல ஆண்டுகளாக, அக்னி நட்சத்திர காலத்தில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.