சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்கால் மருத்துவக் கல்லூரி அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் ஃப்யூசன் -2018 என்ற பெயரில் அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக். 9 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம் ஆகியப் போட்டிகளில் ஆடவர், மகளிர் கலந்துகொண்டனர். போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 48 கல்லூரிகளிலிருந்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெற்றது. கிரிக்கெட்டில் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி அணியும் சென்னை இஎஸ்ஐ அணியும் மோதியதில் விநாயகா மிஷன்ஸ் அணி வெற்றி பெற்றது. தடகளப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் முதலிடமும், ஈட்டி எறிதலில் முதலிடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் 2-ஆம் இடத்திலும் பெற்றி பெற்றது.
போட்டியில் வென்றவர்களுக்கு திரைப்பட நடிகர் அருண்விஜய், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி இணை வேந்தர் டி. பாலசுப்ரமணியன் ஆகியோர் கோப்பையை வழங்கினர். பரிசுகளுடன் காரைக்கால் திரும்பிய கல்லூரி அணியினர், பயிற்சியாளரும் உடற்கல்வி இயக்குநருமான ஆர். ஜான்சன்ராஜ் ரமேஷ் தலைமையில் கல்லூரி புல முதல்வர் அம்புஜம், முதல்வர் விஜயகுமார் நாயர் ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.