அதிமுக உதய தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதா உருவப் படத்துக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கட்சியின் 47 -ஆவது உதய தினம் புதன்கிழமை காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலர் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா உள்ளிட்ட நிர்வாகிகள் கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாகச் சென்றனர்.
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள், சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாவட்டத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.