காரைக்கால் பகுதியில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டுக் கிடந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு, அவரது காரில் கொண்டு சேர்த்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை, பொதுமக்கள் பாராட்டினர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் புதன்கிழமை திருநள்ளாறு பகுதி நோக்கி அலுவல் பணிக்காக காரில் சென்றுகொண்டிருந்தார். காரைக்கால் நகரின் திருநள்ளாறு சாலையில் முருகராம் நகர் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசி (70) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அடிபட்டு சாலையோரத்தில் கிடந்தார். மோட்டார் பைக் ஓட்டிவந்த இளைஞருக்கும் லேசான காயமேற்பட்டது. அந்த பகுதிக்கு வந்த தமுமுக மாநில செயலர் அப்துல் ரஹீம், 108 ஆம்புலன்ஸை வரவழைக்க ஏற்பாடு செய்து காத்திருந்தார். அலுவல் பணிக்காக சென்ற ஆட்சியர், காரை நிறுத்தி இறங்கி, மூதாட்டியை தமது காரில் ஏற்றுமாறு ஏற்பாடு செய்தார். ஆட்சியரின் பாதுகாவலர் மூதாட்டியை காரில் ஏற்றி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு ஆட்சியர் புறப்பட்டார். ஆம்புலன்ஸ் வாகனம் வருகைக்காக பாதிக்கப்பட்ட மூதாட்டி காத்திருந்த வேளையில், தக்க சமயத்தில் ஆட்சியரின் இந்த மனிதாபிமான செயல் பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த விபத்து குறித்து நகர காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.