பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து, காரைக்காலில் மாட்டு வண்டி ஓட்டி திமுகவினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் திமுகவினர், மத்திய பாஜக அரசைக் கண்டித்து மாட்டு வண்டி ஓட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் பாரதியார் சாலையில் பேருந்து நிலையம் வரை மாட்டு வண்டி ஓட்டியவாறு, மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பிக்கொண்டு சென்றனர்.
பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமானிய மக்கள் எரிபொருள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பதை மத்திய அரசு உணராமல் இருப்பதற்கான பாடத்தை, இந்திய மக்கள் தக்க நேரத்தில் புகட்டுவார்கள் என திமுக அமைப்பாளர் கூறினார்.