பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை நலவழித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் கே. மோகன்ராஜ் அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளில் காலை நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் டெங்கு குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை நலவழித்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த இறைவணக்கக் கூட்டத்தில், நலவழித்துறை பூச்சி மற்றும் கொசுக்களால் ஏற்படும் நோய் தடுப்பு தொழில் நுட்ப உதவியாளர் சேகர் கலந்துகொண்டு, மாணவ, மாணவியரிடையே பேசினார்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு மற்றும் புழுக்களை அழிக்கும் முறை, காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முறை மற்றும் அங்குள்ள வசதிகள், வீடு மற்றும் பள்ளியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம், நீர் தேங்காமல் வைத்திருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கிக் கூறினார்.
சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், இளையராஜன், சுகாதார உதவியாளர்கள் செல்வமதன், புவனேஸ்வரி மற்றும் பள்ளி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.