காரைக்கால் நகர பகுதியில் குடிநீர் குழாய் பதிப்புக்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், இவற்றை சீரமைக்காததைக் கண்டித்து மரம் நடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் பிரதேச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் பி. மதியழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் நகர பகுதியில் புதிதாக குடிநீர் குழாய் பதிப்புப் பணி நடைபெறுகிறது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதன் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலையில் மரம் நடும் போராட்டம் நடத்தப்படும். அரசுப் பள்ளிகள் தொடங்கி காலாண்டுத் தேர்வும் முடிவடைந்து, விடுமுறை காலம் தொடங்கவுள்ள நிலையிலும், மாணவர்களுக்கான சீருடைகள் இன்னமும் வழங்கப்படாததை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடையை புதுச்சேரி கல்வித்துறை வழங்க வேண்டும். புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.