வேளாங்கண்ணி அருகே கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கைக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி, அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் பிரியா (19). நாகப்பட்டினத்தில் பட்டப்படிப்பு படித்த இவர் கடந்த பிப்ரவரி மாதம் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் தன்னை காதலிக்குமாறு கூறியதாகவும், இதற்கு மறுத்ததால் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை பிரியா பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.
இதையடுத்து, பிரியாவின் சாவுக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் நாகை அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக, கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து
வருகின்றனர்.