நாகப்பட்டினத்தில் அரசு ஊழியர் சங்கம், இந்தியத் தொழிற்சங்க மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புத்தக தினத்தையொட்டி புத்தகக் கண்காட்சி மற்றும் சென்னை பாரதி புத்தகாலயக் கிளை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல் தலைமை வகித்தார். பாரதி புத்தகாலயக் கிளையை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ந. காவியன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜீவி பங்கேற்று 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்ற தலைப்பில் பேசினார்.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளைச் செயலர் எஸ். மணி, கிளைத் தலைவர் என். பாபுராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் சீனி.மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.