அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய சந்தா நிலுவைத் தொகையை செலுத்தாத கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் 558 உள்ளூர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் உள்ளனர். இதில், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மாதாந்திர சந்தா தொகையை அதிகளவில் நிலுவையாக வைத்துள்ளனர். அந்த வகையில், நாகை மாவட்ட கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் ரூ. 3.7 கோடி சந்தா நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையில் 50 சதவீதத் தொகையை வரும் 30-ஆம் தேதிக்குள்ளும், மீதமுள்ள 50 சதவீதத் தொகையை மே 15-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் தொகை செலுத்தாத கேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் கேபிள் உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதுடன், தொடர்புடையவர்கள் மீது குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
டிஜிட்டல் செட் ஆப் பாக்ஸ்
அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் கேபிள் டி.வி ஆப்ரேட்டர்களுக்கு டிஜிட்டல் செட் ஆப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சந்தா தொகையை நிலுவையின்றி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும். எனவே, குறித்த காலக்கெடுவுக்குள் நிலுவையின்றி சந்தா தொகையை செலுத்த கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் முனைப்புக்காட்ட வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.