யோகா கற்றுக் கொண்டால் போலீஸாருக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும் என மதுரை குடும்ப நல நீதிமன்ற ஆலோசகரும், மனநல மருத்துவருமான ராஜேந்திரன் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் போலீஸாருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு டிஎஸ்பி ஆர். சந்திரசேகரன் தலைமை வகித்தார். இதில் மதுரை குடும்ப நல நீதிமன்ற ஆலோசகரும், மனநல மருத்துவருமான ராஜேந்திரன் பங்கேற்று போலீஸாரின் உடல் நலம், மன நலம் பேணுதல் என்னும் தலைப்பில் பேசியது: போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தினசரி சந்திப்பதால் போலீஸாருக்கு மன அழுத்தம் உண்டாகிறது.
மன அழுத்தத்தால் பணியில் சரியான படி கவனம் செலுத்த முடிவதில்லை. மேலும் இதனால் விபத்துகள் நேரிடுவதுடன் குடும்பத்துடனும் சுமூக உறவை கடைப்பிடிக்க முடியாமல், பிரச்னைகள் ஏற்படுகிறது.
மன அழுத்தத்தை தவிர்க்க யோகா பழகலாம். யோகா கற்றுக் கொண்டால் மனக் கட்டுப்பாடு வருவதுடன் கோபமும் குறையும். போலீஸ் என்பதற்காக எப்போதும் இறுகிய முகத்துடன் இருக்க வேண்டும் என்பதில்லை.
குற்றவாளிகள் உள்பட அனைவருடனும் அன்பாக பழக முயற்சிக்க வேண்டும். பணியில் கவனமுடன் இருக்க வேண்டும்.
அத்துடன் எப்போதும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் விடுமுறை நாள்களில் மனதுக்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வர வேண்டும் என்றார். பயிற்சி முகாமில் ஏராளமான போலீஸார் பங்கேற்றனர்.