நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய் குழாயில் ஞாயிற்றுக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் இரண்டு எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை கொண்டு செல்லும் குழாயில் ஞாயிற்றுக்கிழமை காலை உடைப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே அதே இடத்தில் 3 முறை உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு, ஓஎன்ஜிசி நிறுவனத்தை நோக்கிச் சென்றனர். இதையறிந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் எரிவாயு அனுப்பும் பணியை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையில், எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் கூறியது:
பாதுகாப்பாக செயல்படுகிறோம் என ஓஎன்ஜிசி நிறுவனம் கூறிவரும் நிலையில், ஒரே இடத்தில் 4-ஆவது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக தனது பணிகளை நிறுத்தவேண்டும். மீறி பணிகளை மேற்கொண்டால் தடுத்து நிறுத்துவோம் என்றார்.
இதேபோல், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் எண்ணெய்க் குழாய் வெடிப்பை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியது:
மாதிரிமங்கலம் ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்திலிருந்து எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய், பாசன வாய்க்காலில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில் நாகை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளுக்கு தடைவிதிக்கவேண்டும் என்றார்.