குறிப்பிட்ட வயது வரும் வரை பள்ளி மாணவர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். பக்கிரிசாமி கூறினார்.
கருத்தரங்கில் மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். அழகிரிசாமி பேசியது: மாணவர்கள் சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம். சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது 20 முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நாகை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வாகன விபத்துகளில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். எனவே, பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார்.
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்குக்கு டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் எம். முருகேசன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் வி. அன்புச்செழியன், மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை-1)பி.சண்முகவேல், டெல்டா ரோட்டரி சங்க செயலர் எஸ். சங்கர்கணேஷ், பொருளாளர் கணேஷ்குமார், பள்ளி உதவித் தலைமையாசிரியர் என். திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.