கொள்ளிடத்தில் அண்மையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
கட்சியின் மாவட்டச் செயலாளர் மாலிக் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மிஸ்பாமா வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆக்கூர் ஷாஜகான், பரகத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் எம்எல்ஏ-வுமான தமிமுன்அன்சாரி சிறப்புரையாற்றினார்.
பின்னர், தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியது:
கொள்ளிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க. ஆகிய கட்சிகளிலிருந்து விலகி 100 பேர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளனர். பாபர்மசூதி இடிப்பில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைச் செயலாளர் கலீல்ரகுமான் நன்றி கூறினார்.