ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியைப் போதிக்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.
நாகை மாவட்டத் தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தருமபுரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, அப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்துப் பேசியது:
மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை மட்டுமே போதித்தால் போதாது, வாழ்வியல் முறைகளையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கவேண்டும் என்றார் ஆட்சியர்.
தொடர்ந்து, நாகை மாவட்ட தொடக்கக் கல்வி துறை மூலம் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
இவ்விழாவில், பள்ளிச் செயலாளர் ஆர். சிவபுண்ணியம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் எம். திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தார். நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆ. தியாகராஜன், மயிலாடுதுறை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சோம. அண்ணா, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற நாகை மாவட்டத் தலைவர் ஜெக. மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமையாசிரியர் ஜி. வெங்கடேசன் நன்றி கூறினார்.