நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் காய்கறிப் பயிர்கள் சாகுபடியில் உயர்தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குநர் ஏ.இ.சுரேஷ்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
காய்கறிப் பயிர்கள் சாகுபடியில், சாகுபடி தொழில்நுட்பம் பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெ.பாஸ்கரன் எடுத்துரைத்தார். காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றின் இயற்கை முறையிலான மேலாண்மை முறைகளான முட்டை ஒட்டுண்ணிகள் பயன்பாடு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்தழிக்கும் இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் மற்றும் ஊதா வண்ண ஒட்டுப் பொறி, வேப்பெண்ணெய் சார்ந்த அசடிராக்டின், மீன் எண்ணெய் சோப் ஆகியவற்றின் பயன்பாடுகள் பற்றியும் காய்கறிப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் இயற்கை முறையிலான மேலாண்மையான சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், டிரைக்கொடெர்மா விரிடி ஆகியவற்றின் பயன்பாடுகள் பற்றியும், விவசாயிகளுக்கு உதவி பேராசிரியர் ராஜா.ரமேஷ் எடுத்துரைத்தார்.
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவி பேராசிரியர் மருத்துவர் செ.சரவணன், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை துணை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா.
தோட்டக்கலை அலுவலர் அ.முகம்மது சாதிக் வரவேற்றார். தோட்டக்கலை அலுவலர் உ.சத்யஜோதி நன்றி தெரிவித்தார்.