குத்தாலம் வட்டம், எலந்தங்குடி ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் அங்கக ஆராய்ச்சி பயிலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழி' விவசாய கருத்தரங்கில், இயற்கை விவசாயத்துக்கு அதிகளவில் அரசு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர்.
கருத்தரங்குக்கு தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில தலைவர் அம்பலவாணன் தலைமை வகித்தார். பாலையூர் ரங்கநாதன், காரைக்கால் அரசு மருத்துவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் எழுத்தாளரும், இயற்கை வேளாண் ஆர்வலருமான நக்கீரன் பேசியது: நிகழாண்டு வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப்போய் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றத்துக்கு மனிதன் தான் முக்கியக் காரணம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகளை அழித்து, அங்கு தேயிலை தோட்டத்தை அமைத்ததாலேயே மழை பொய்த்துள்ளது என்றார்.
ஆராய்ச்சி பயிலக நிறுவனர் அல்லீஸ் பாக் பேசியது:ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதால் மண் மலட்டுத்தன்மையாக மாறிவருகிறது. தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட உரங்கள், மண்புழு உரங்கள் என்று இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மண் நன்றாக இருப்பதோடு நீரை உறிஞ்சி தேக்கி வைக்கும் என்றார். நமது பாரம்பரிய நெல் ரகங்களையும், நாட்டு மாடுகள் மற்றும் இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க தமிழக அரசு அதிகளவில் மானியம் வழங்க வேண்டும் என கருத்தரங்கில் விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர்.
இதில் சுற்றுச்சூழல் வல்லுநர் சுல்தான் இஸ்மாயில், எழுத்தாளர் பாரதிநாதன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் இரணியன், பாரம்பரிய நெல் காப்பாளர் அசோகன், பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.