சீர்காழி அருகே குளத்தில் மண் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் தாமரைக்குளம் உள்ளது. அரை ஏக்கர் பரப்பளவில் இருந்த தாமரைக்குளம் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது கால் ஏக்கர் பரப்புக்கு குறைவாகவே உள்ளது. இக்குளத்துக்கு சென்று வரும் பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் யாரும் இக்குளத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிமராமத்து பணியில் இக்குளத்திலிருந்து மண்ணை எடுத்து பயன்படுத்த சீர்காழி வட்டாட்சியர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தனிநபரால் மண் எடுக்கும் முயற்சியில் குளத்துக்கு செல்லும் பாதையை தாற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை சீர்செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அனந்தராமன் மற்றும் விவசாயிகள் அமர்நாத், ராசு, பாலாஜி உள்ளிட்டோர், கிராம நிர்வாக அலுவலர் பிறைசந்திரனிடம் இந்த தாமரைக்குளம் பாதிக்கும்மேல் ஆக்கிரமிக்கப்பட்டு, குளத்துக்குச் சென்று வரும் பாதை அடைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றியும், நிரந்தரமாக குளத்துக்கு செல்லும் பாதையை திறந்துவிட்ட பின்னர் தான் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அதுவரை மண் எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோரிடமும் மனு அளித்துள்ளனர். இதனால் மண் எடுக்கும் முயற்சி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.