சீர்காழி அருகேயுள்ள செம்மங்குடியில் செல்வவிநாயகர், மாரியம்மன், அய்யனார், வலம்புரி விநாயகர், காளியம்மன் ஆகிய 5 கோயில்களில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்மங்குடி கிராமத்தில் அருகருகே அமைந்துள்ள 5 கோயில்களுக்கும் திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையொட்டி, நான்கு கால யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு கோயில் முன்பும் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு 5 கோயில்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.