சீர்காழியில் பக்கிரிகுளம் தூர்வாரும் பணி தொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டதையொட்டி குளத்தில் மண் எடுக்க தாற்காலிகமாக தடை விதித்து வட்டாட்சியர் பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
சீர்காழி நகரின் மையப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் பழைமையான பக்கிரி குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வார தனிநபர் ஒருவரால் அனுமதி பெறப்பட்டு தூர்வாரும் பணி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிக பள்ளமாக குளத்தில் மண் எடுக்கபட்டு வருவதாக குற்றம் சாட்டி மண் எடுப்பதை நிறுத்தக் கோரி சீர்காழி அதிமுக (அம்மாஅணி) நகரச் செயலர் அ. பக்கிரிசாமியும், அவரது மகன் முத்துக்குமாரும் குளத்துக்கு செல்லும் வழியில், சாலையில் அமர்ந்து தர்னாவில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இவர்கள் இருவருர் மட்டும் தர்னாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திர ஓட்டுநரிடம், நகரச் செயலர் பக்கிரிசாமி மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி பணியை தடுத்து நிறுத்தினார்.
அப்போது குளம் தூர் வார வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றவரின் ஆதரவாளர்கள், வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுத்தான் குளம் முறையாக தூர்வாரி மண் கொண்டு செல்லப்படுகிறது. அதனால், பணியை நிறுத்த முடியாது என்று கூறினர்.
இதனால் நகரச் செயலர் பக்கிரிசாமிக்கும், குளம் தூர்வாரும் அனுமதி பெற்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
குளத்தில் மண் எடுக்கத் தடை: பக்கிரிகுளம் தூர்வாரும் பணி தொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டதையொட்டி குளத்தில் மண் எடுக்க தாற்காலிகமாக தடை விதித்து வட்டாட்சியர் பாலமுருகன் உத்தரவிட்டார்.