விதிமுறைகளுக்கு உட்பட்டு குளங்களை தூர்வார வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக இளைஞரணி மாநில செயலர் கே. சரண்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் உயரிய நோக்கத்தில் தமிழக அரசு அந்தந்த பகுதி குளங்களை வட்டாட்சியர் அனுமதியுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தூர்வாரி, அந்த மண்ணை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற திட்டத்தை அறிவித்தது.
இந்த திட்டத்தின்படி, நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதேபோல், சீர்காழி பகுதியில் குளங்கள் தூர்வாருவது அத்தியாவசிய தேவையான ஒன்றுதான். ஆனால், தூர்வாருகிறோம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக குளங்களில் மண்களை சுரண்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு குளங்களில் படித்துறை பகுதியில்கூட மண்களை விட்டுவைக்காமல் ஆழமாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்டு குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.