வெளிநாட்டில் வேலை செய்த இருவர் விபத்தில் சாவு: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை

குத்தாலம் அருகே உள்ள கிராமங்களிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றவர்களில் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

குத்தாலம் அருகே உள்ள கிராமங்களிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றவர்களில் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம் மேலையூர் ஊராட்சி ஆணைக்குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ரமேஷ் (28). மருத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் மணிகண்டன்(25). தேரழந்தூர் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பிரபு(30). இவர்கள் மூவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செளதி அரேபியா, ரியாத் நாட்டில் தனியார் கம்பெனியில் கொத்தனார் வேலைக்காக சென்றிருந்தனர். இவர்களுடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், வெளிநாட்டவர்கள் இருவரும் என மொத்தம் 6 பேர் கடந்த 13-ஆம் தேதி வேலையை முடித்துக்கொண்டு, காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில், பிரபுவைத் தவிர மற்ற 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய பிரபு, விபத்து குறித்து தனது குடும்பத்தினருக்கும், ரமேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் உயிரிழந்தது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்து நடந்து 5 நாள்களாகியும் அவர்கள் வேலை செய்த கம்பெனி நிர்வாகம் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காததுடன், இதுகுறித்த தகவலையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை.
எனவே மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையில் தலையிட்டு, இறந்தவர்களின் உடலையும்,  உயிருக்கு போராடும் பிரபுவையும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com