தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதி அதிமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் வேதாரண்யம் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
அம்மாப்பேட்டையை அடுத்த வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி மகன் அருமைநாதன் (எ) ராஜசிம்மன் (42). அதிமுக பிரமுகரான இவர், கீழகோயில்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராக பதவி வகித்தவர். வடபாதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்து வந்தார்.
திருபுவனம் செல்ல சொந்த ஊரில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை காரில் பயணித்துள்ளார். சாலியமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், காரை விட்டு கீழே இறங்கி கடைக்குச் சென்ற ராஜசிம்மனை அங்கு மறைந்திருந்த சிலர் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாபநாசம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக மன்னார்குடி நடராஜன் மகன் டேஜா (எ) மாரிமுத்து (31), வலங்கைமான் முருகையன் மகன் செல்வா (எ) செல்வகுமார் (31), தஞ்சாவூர் கோவிந்தராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (35) ஆகிய மூவரும் வேதாரண்யம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் மூவரையும் ஜூலை 31 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கும்படி நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார்.