சீர்காழி குறுவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து புதன்கிழமை பணியாற்றினர்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் சார்பில், உடற்கல்வி ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும். விலையில்லா உடற்கல்வி பாடப்புத்தகம், விலையில்லா விளையாட்டு பொருள்களை அரசே வழங்க வேண்டும். பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
உடற்கல்வித்துறைக்கு என தனியாக இணை இயக்குநர் பதவியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சீர்காழி வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
இதேபோல், சீர்காழி குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ். முரளிதரன், என்.பிரபாகரன், எஸ். செல்லத்துரை, சி. வேல்முருகன், எஸ். பாஸ்கரன், ஏ. விவேகானந்தன் உள்ளிட்டோரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.