நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 2 இளைஞர்கள், அரசு விரைவுப் பேருந்து மோதி உயிரிழந்தனர்.
வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ரா. ராமன் (20). காமேஸ்வரம், ஆணையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரா. செந்தில்குமார் (19). இருவரும் கட்டுமானத் தொழிலாளர்கள்.
அவர்கள் 2 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து, ஒரே மோட்டார் சைக்கிளில் நாகையிலிருந்து, பிரதாபராமபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வேளாங்கண்ணி அருகே உள்ள ரெட்டாலடி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அரசு விரைவுப் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்தக் காயமடைந்த ராமன், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.