பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு
குத்தாலம் அருகே பெண்ணை தாக்கியதாக 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
பெரம்பூரை அடுத்த வேலம்புதுக்குடியைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி நீலாவதி (43). இவர், அதே ஊரில் ராஜா தெருவில் ஹாஜி முஹம்மதுக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீடு காலி செய்வது தொடர்பாக, நீலாவதிக்கும், ஹாஜி முஹம்மதுக்கும் தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு நீலாவதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் மேலும் ஒரு பூட்டு இருந்ததாம். இதுகுறித்து ஹாஜிமுஹம்மதுவிடம் நீலாவதி கேட்டபோது, அவரின் உறவினரான வதிஸ்டாச்சேரியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் வீட்டை பூட்டியது தெரியவந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் நீலாவதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவர் மீது பெரம்பூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.