மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சங்கத்தின் நாகை மாவட்ட பேரவைக் கூட்டம், மாவட்டத் தலைவர் எஸ். ஜெகதீசன் தலைமையில் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்டச் செயலர் கு. பழனிவேல், மாவட்ட இணைச் செயலர் கருணாநிதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் திருஞானசம்பந்தம், கல்லூரி கல்வி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன், ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மாநிலச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று 7 -ஆவது ஊதியக் குழுவில் உள்ள குறை மற்றும் நிறைகள் குறித்துப் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேயான ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள், குட்டைகள் மற்றும் வாய்க்கால்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.