தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாணிக்கப்பங்கு கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைத்தார்.
கடலோரக் கிராமங்களில் ஒன்றான மாணிக்கப்பங்கு கிராம மக்கள், குடிநீரில் உப்புநீர் கலந்து வந்ததால் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை கிராமத்தில் வைக்க வேண்டும் என பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. இதை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லமுத்து, பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சியினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.