தமிழக மீன் வளத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நீலப்புரட்சி திட்டத்தில் பயன் பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மூலம் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், நன்னீர் மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தகுதி அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டம் மூலம், ஒரு ஹெக்டேருக்கு புதிய மீன் பண்ணை குட்டை அமைக்க 50 சதவீதம் மானியத் தொகையாக ரூ. 3.5 லட்சம் வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள், தொட்டிகளை சீரமைக்க ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீத மானியமாக ரூ. 1.75 லட்சம் வழங்கப்படும். நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினமாக ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீத மானியமாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்படும்.
இத்திட்டங்களில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள், நாகை மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அல்லது சீர்காழி மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.