தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்கும் தைரியம் தான் சாதனைக்கு அடிப்படையாக அமைகிறது என்றார் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் இரா. செல்வநாயகம்.
நாகை, பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி அவர் மேலும் பேசியது: சாதனையாளருக்கும், சாமானியருக்குமான மிக முக்கிய வித்தியாசம், தனது செயலுக்கான பொறுப்பை ஏற்பதில் தான் மாறுபடுகிறது. தனது செயல் வெற்றி பெற்றாலும், தோல்வியில் முடிந்தாலும் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்பவரே சாதனையாளராக முடியும். செய்யும் செயலை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழ வேண்டும் என்ற உந்துதலும் தான் சாதனைக்கான அடிப்படை. பட்டம் பெறும் மாணவ, மாணவியர் தங்கள் வளர்ச்சிக்குத் தாங்களே பொறுப்பேற்கும் பக்குவத்தைப் பெற வேண்டும். பயத்தை புறந்தள்ளி, தன்னையே நேசித்து, தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர்களுக்கு வெற்றி வசப்படுவது உறுதி என்றார் இரா. செல்வநாயகம்.
பாரதிதாசன் பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர் ஹெலன் குளோரி, பிரேமசுதா, பிரவின்குமார், நளினி ஆகியோருக்கு பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. சிவில் சப்ளைஸ் அன்ட் கன்ஸ்யூமர் அஃபர்ஸ் துணை இயக்குநர் பி. கீதா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கல்லூரி தாளாளர் த. ஆனந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் நிறைமதி வரவேற்றார். செயலர் த. மகேஸ்வரன் நன்றி கூறினார்.
கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகதாஸ், நிர்வாக அலுவலர் குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து
கொண்டனர்.