நாகை மாவட்டம், கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் மான்களை வேட்டியாடியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, மேலும் ஒருவரை வனத்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அமைந்துள்ள பசுமை மாறாக் காடுகள் வன உயிரின பாதுகாப்பு சரணாலயமாக பராமரிக்கப்படுகிறது.
இங்கு அரிய வகை இனமான வெளிமான்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. இவை தவிர, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகள், உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
சரணாலயத்தில் மான், காட்டுப் பன்றி போன்ற விலங்குகள், பறவைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வனத்துறையினர் மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மான்களை வேட்டையாடுவதாகக் கூறப்படும் தகவலின் பேரில், கோடியக்கரை வனத்துறையினர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வேதாரண்யத்தில் சந்தேக நபர்களின் வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேதாரண்யத்தைச் சேர்ந்த சி. ராசகோபால் (48) வீட்டிலிருந்து அரிய வகை இன வெளிமான்களின் கொம்புகள்-6, புள்ளிமான் கொம்புகள்- 12, நாட்டுத் துப்பாக்கி-1, இயந்திர துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 151 உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், ராசகோபாலை கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் இருவரை தேடி வந்தனர்.
இதுகுறித்து கோடியக்கரை வனத்துறை நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் டுமீல் குமார் (எ) ஜெயக்குமாரை (37) கோடியக்கரை வனச்சரக அலுவலர் அய்யூப்கான் தலைமையிலான வனத்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட டுமீல் குமார் (எ) ஜெயக்குமாரை ஜூன் 1 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தலைமறைவாகவுள்ள மணியன்தீவு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.