நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலின் வைகாசி திருவிழா தேரோட்டம் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, தேர் அமைப்புப் பணிகள் தீவிரமாகியுள்ளன.
நாகையில் உள்ள நீலாயதாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ காயாரோகண சுவாமி கோயில், தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது. சப்தவிடங்கர் தலங்களுள் ஒன்றாகவும், அம்பாளின் ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது இக்கோயில்.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான வைகாசி திருவிழா மே 23-ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி நடைபெறுகிறது.
விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றான இக்கோயிலின் தேரில் ஸ்ரீ தியாகராஜ பெருமானே வீதியுலா வருவது வழக்கம். இந்தத் தேரின் அமைப்பு திருவாரூர் ஆழித்தேரை ஒத்ததாக, பக்கத்துக்கு 8 பட்டைகளைக் கொண்ட வடிவிலேயே இருக்கும்.
மே 5-ஆம் தேதி தியாகராஜ பெருமான் தேருக்கு எழுந்தருள உள்ளதையொட்டி, மே 4-ஆம் தேதிக்குள் தேர் அமைப்புப் பணிகள் நிறைவடைய வேண்டும். இதையொட்டி, தேர் அமைப்புப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. கடந்த சில நாள்களாக தேரை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது தேரின் மேல் தளத்தில் கம்புகளைக் கொண்டு தேர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.