மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 101 பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
2017-18 ஆம் கல்வியாண்டில், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் ஆகியவை மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் ஆகியவை ஆங்காங்கே உள்ள பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணியை மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ஜெ. முத்தெழிலன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளில் கல்வித் துறையில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி தொடக்க நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் எஸ். கண்ணன், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.