வேதாரண்யம் அருகே மயானத்துக்கு சாலை கோரி மறியல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தலித் வகுப்பு மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அவர்களது மயானத்துக்கு சாலை வசதிக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தலித் வகுப்பு மக்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அவர்களது மயானத்துக்கு சாலை வசதிக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருதூர் தெற்கு, பூவன்தோப்பு பகுதியில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த தலித் வகுப்பு மக்கள் வசிக்கின்றனர். இவர்களது குடியிருப்புப் பகுதிக்கும், மயானத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பாதை தனியாருக்குச் சொந்தமானது எனக் கூறி தடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பாதிப்படைந்த மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயனளிக்காததால், ஏற்கெனவே அறிவித்திருந்தபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மருதூர் தெற்கு இரட்டைக்கடை வீதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட துணைச் செயலர்  த. நாராயணன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் கே. மாரியப்பன், பொருளாளர் ஜி.கே. நாகராஜன் உள்பட பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற நாகை துணைக் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) ராமகிருஷ்ணன், வேதாரண்யம் தனி வட்டாட்சியர் ரவி, துணை வட்டாட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நான்கு மாதங்களுக்குள் மயான சாலை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியலின்போது வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com