வடகிழக்குப் பருவமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
பருவமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு, வீடு இழப்பு மற்றும் கால்நடை இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தலைஞாயிறு 3-ஆம் சேத்தியில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த கா. ஜானகி என்பவரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சத்துக்கான காசோலையும், நாகை நகராட்சிப் பகுதியில் இடிந்த 2 வீடுகளின் உரிமையாளர்களுக்குத் தலா ரூ. 4,100-க்கான காசோலைகளையும், 6 கால்நடை இழப்புக்கு நிவாரணத் தொகையாக ரூ. 85 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் டாக்டர்.கே. கோபால், சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.