வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் கனமழையால் வயல்களில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவதில் முன்னேற்றம் இல்லாததால் நீருக்குள் சிக்கியுள்ள பயிர்கள் முகம் காணாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் வெள்ள நீர் 12 நாள்களை கடந்தும் வடிவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விளை நிலங்களில் சிக்கியுள்ள சம்பா நெற் பயிர்கள் கேள்விக்குறியாகியுள்ளன. வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள வண்டல், குண்டூரான்வெளி கிராமங்கள் மற்றும் பழையாற்றங்கரை கிராம மக்களின் பயன்பாட்டுக்கு படகுகள் இயக்கம் தொடர்கிறது. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட தாற்காலிக பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நெய்விளக்கு, செம்போடை போன்ற பகுதிகளில் வெள்ளம் வடிவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சுமார் அரையடி அளவில் மட்டுமே தண்ணீர் வடிந்து காணப்படுகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு வழங்கும் 17 மையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றன.12 நாள்களுக்கு மேலாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இனி வெள்ளம் வடிந்தாலும் பயிர்களின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.