சீர்காழி அருகே வாய்க்கால்களை தூர்வாராததால் 13 நாள்களாக குளம்போல் அரசுப் பள்ளியை சூழ்ந்திருந்த மழைநீர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது.
நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம், கொடக்காரமூலை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக் கட்டத்தைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாள்களாக மழை ஓய்ந்த நிலையிலும், இப்பள்ளியில் சூழ்ந்திருந்த மழை நீர் வடியவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். பள்ளி முன்பு 50 மீட்டர் தொலைவில் உள்ள மாட்டுக்காரன் ஓடை பாசன வாய்க்கால் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாராததும், பள்ளி பின்புறம் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாராததே பள்ளி வளாகத்திலிருந்து மழைநீர் வெளியேறாததற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில், ஒன்றிய ஆணையர் நக்கீரன், வருவாய் ஆய்வாளர் வளர்மதி பணியாளர்களுடன் வந்து பள்ளிக் கட்டடத்தைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை மாட்டுக்காரன் ஓடை பாசனவாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் 10 இடங்களில் பள்ளம் தோண்டி வடியவைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் , வருவாய் ஆய்வாளர் வளர்மதி, கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலர் சவுந்திரபாண்டியன், பள்ளித்தலைமையாசிரியர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.