குத்தாலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோமல் ஊராட்சி செபஸ்தியார்கோவில் என்ற இடத்தில் கடந்த அக்.22-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்.26-ஆம் தேதி கிராமமக்கள் ஆடுதுறை-மங்கைநல்லூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திருமாறன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் 15
நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 15 நாட்கள் கடந்தும் டாஸ்மாக் கடை மூடப்படாததால், திங்கள்கிழமை கிராம மக்கள் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முன்னிலையில் புதன்கிழமை (நவ.15) மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் வட்டாட்சியர் திருமாறன் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.