நாகை மாவட்டம், பொறையாறு அருகேயுள்ள ஆக்கூரில் பயிர்க் காப்பீட்டுத் தொகைக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் 2016-17 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்த காலமநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் பாதிப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க வட்ட செயலாளர் இராசய்யன் தலைமை வகித்தார். 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
வட்டாட்சியர் முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தி, பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.