நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் கோயில் துலா உத்ஸவ விழாவையொட்டி கெளரி மயூரநாதர் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான, மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் துலா உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு அக்.18-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கி, தொடர்ந்து அமாவாசை பிறப்புத் தீர்த்தம், விநாயகர் துவஜாரோகணம், திருக்கொடியேற்றம், கோபுரதரிசனம், மயிலம்மன் பூஜைகள் நடைபெற்றன. கடைசி 10 நாள்களில் நடைபெறும் விழாக்களின் 7-ஆவது நாளான திங்கள்கிழமை அருள்மிகு கெளரி மயூரநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையிலிருந்து சிறப்பு வழிபாடுகள், அபிஷே ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி அம்பாள் யானை, யாளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் துலாக்கட்ட காவிரிக்குப் புறப்படாகிப் பின்னர் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றன.
அருள்மிகு கெளரி மயூரநாதர் திருக்கல்யாணம்: சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு வேத மந்திரங்கள் முழங்க ஐதீக முறைப்படி கௌரி முயூரநாதர் திருக்கல்யாணம் இரவு 7.30 தொடங்கி 9.30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளி ரதத்தில் திருமணக்கோலத்தில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருமலையமார் உடையார் திருக்கல்யாண அறக்கட்டளையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
திருக்கல்யாணத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார், பாடசாலை மாணவர்கள், கோயில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சிகளில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள், கட்டளை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனத் திருமடம் கண்காணிப்பாளர் கே. சுப்பிரமணியன், மணியம் சண்முகம், கோயில் கண்காணிப்பாளர் எஸ். குருமூர்த்தி, துணைக்கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை திருத்தேரோட்டம்: துலா உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான மயூரநாதர் கோயில் திருத்தேரோட்டம் புதன்கிழமை (நவ.15) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.