நாகப்பட்டினத்தில் மழையால் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகர 22-ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு நிர்வாகிகள் சு. சிவகுமார், ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார். நகரச் செயலாளர் ப. சுபாஷ்சந்திரபோஸ் வேலை அறிக்கையும், நிர்வாகி சு. மணி நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான நாகைமாலி நிறைவுரையாற்றினார். இதில் மூத்த உறுப்பினர் வி.எம். கிருஷ்ணன், நிர்வாகிகள் டி. தினேஷ்பிரபு, எம். பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாகை வெளிப்பாளையம் ரயில் நிலையத்தைத் தனியாருக்குப் பதிலாக, ரயில்வே நிர்வாகமே நடத்த வேண்டும். ரயில் நிலைய நடைமேடையை உயர்த்த வேண்டும். மழையால் சேதமடைந்த அனைத்துச் சாலைகளையும் சீர்செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமரைக் குளத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நாகை, நாகூர் பகுதிகளில் உள்ள அனைத்துக் குளங்களையும் தூர் வார வேண்டும். நாகையில் உள்ள மின் தகன மேடையைச் சீர் செய்து, நகராட்சி நிர்வாகத்தின் கீழ், பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.