குத்தாலம் அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார்.
குத்தாலம் வட்டம் கோமல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன்(42). இவர் திருவாவடுதுறை ஊராட்சியில் தாற்காலிக ஒப்பந்த மின் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருவாவடுதுறை மேலத் தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய, மின்கம்பத்தில் ஏறும்போது மின்சாரம் பாய்ந்து இடுப்பில் கட்டிய பாதுகாப்பு கயிறுடன் தொங்கினார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சாமிநாதனை மீட்டு ஆடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.