இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் தமிழகத்தில் 21,431 இருசக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 4,730 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, விபத்துகளில் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடித்து, விபத்துகளைக் குறைக்க முனைப்புக்காட்ட வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.