செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் சிறப்புலி நாயனார் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூரில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்த ஊராகும். இங்கு பிரசித்திப்பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒருமுறை நாயனார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கியபோது சிவபெருமான் ஆயிரம் பேரில் ஒருவராக வந்து உணவு சாப்பிட்டாராம்.
அதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் சிறப்புலி நாயனார் குரு பூஜையின்போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். அதன்படி, புதன்கிழமை சிறப்புலி நாயனார் குருபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி காலை 7 மணிக்கு இடபக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 108 சிவனடியார்கள் உலக நன்மைக்காக சிவபூஜை நடத்தினர். இதையடுத்து நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதேபோல், இங்குள்ள தான்தோன்றீஸ்வரர், வாள்நெடுங்கன்னியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்ரமணியன் அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் திரளானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிறப்புலி நாயனார் வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.