சீர்காழி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
சீர்காழியில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீர்காழி மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டியதால் பேருந்து நிலையத்தை தபால் நிலையம் அருகில் அமைக்க வேண்டும், ஸ்ரீசட்டைநாதசுவாமி, தாடாளன் பெருமாள்கோயிலுக்கு வரும் பக்கதர்களுக்கு கழிப்பறை, குளியல் அறை, தங்கும்மிடம், வாகன நிறுத்த வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், கனமழைப் பெய்தும் சீர்காழி நகரில் குளங்களில் போதிய அளவுக்கு நீர் இல்லை. எனவே, மழை நீர் எளிதாக குளத்துக்குச் செல்லும் வகையில் வடிகால்களை சீரமைக்க வேண்டும், மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் நகரத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவர் சீனிவாசன், நகரச் செயலர் சந்திரசேகர், நகர பொதுச் செயலர் முருகன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாநில மகளிரணி செயலர் முத்துலெட்சுமி பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.