முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
2017-18 -ஆம் கல்வி ஆண்டில் முதல் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளிடமிருந்து, பிரதமர் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிகழாண்டில், இத்திட்டத்தில் பல்வேறு புதிய படிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.
தகுதியான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் வாரிசுகள்; www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக் குறிப்புப்படி, இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் நவ. 30.
இத்திட்ட உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரின் படைப்பணி சான்று சுருக்கம் பெற, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, உதவித் தொகைக்குக்கு விண்ணப்பிக்கும் வாரிசின் கல்விச் சான்று ஆகியவற்றுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.