மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கிய இருவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை வட்டம், அருவாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பி. கார்த்தி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் அருண், முரளி ஆகியோர்களுக்கிடையே நிலம் விற்பது, வாங்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நவ. 18-ஆம் தேதி கார்த்தி தனது வயலுக்கு பூச்சி மருந்துத் தெளித்து விட்டு, அருணுக்குச் சொந்தமான வயல் வரப்பில் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட தகராறில், சகோதரர்களான அருண், முரளி ஆகிய இருவரும் கார்த்தியைத் தாக்கி அவரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினார்களாம். இதுகுறித்து கார்த்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அருண், முரளி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.