நாகை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தங்களை பணி நீக்கம் செய்ய முயற்சிப்பதாக டெங்கு களப் பணியாளர்கள் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம் பேரூராட்சியில் டெங்கு களப்பணியாளர்கள் 10 பேர், மாவட்ட பூச்சியல் வல்லுநர், வட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், பேரூராட்சி நிர்வாகத்தால் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை தினக் கூலியாக ரூ. 270 என்ற ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கொல்லைப்புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் பாட்டில்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பணி ஒப்பந்த காலம் நிறைவடையும் முன்னதாக பணியிலிருந்து விலக சொல்லி வற்புறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, டெங்கு களப்பணியாளர்கள் 10 பேரும் பணி புறக்கணிப்பு செய்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த காலம் முடிவடையும் வரை தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.