நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 5 டிப்பர் லாரி, 2 டிராக்டர் என 7 வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வாகனங்களை இயக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை அருகே செம்பியன்மகாதேவியில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி வாகனங்களில் மணல் எடுத்துச் செல்வதாக கோயில் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் வேளாங்கண்ணி போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது கோயிலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து 5 டிப்பர் லாரி, 2 டிராக்டர்களில் மணல் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்த திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கருணாநிதி (35), நடராஜன் (34), திருச்சி, துவாக்குடியைச் சேர்ந்த ராஜா (32), தஞ்சை, பூதலூரைச் சேர்ந்த கதிரவன் (36), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (31) ஆகியோரையும், டிராக்டரை ஓட்டி வந்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த அழகுசெல்வம் (24), சிவக்குமார் (42) என மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.