நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞரை கொலை செய்து எரித்த சம்பவத்தில் அவரது தந்தையும், சகோதரர்கள் இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம், சிறையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல்(60). இவரது மகன்கள் மணியன் (36), முருகானந்தம் (33), தனுஷ் (எ) தமிழரசன் (25).
முருகானந்தத்தின் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மற்றொரு பெண்ணை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை செட்டிப்புலத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்த முருகானந்தம், அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது, இவருக்கும், இவரது தம்பி தனுஷ் (எ) தமிழரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கம்பியால் தாக்கப்பட்ட தமிழரசன் உயிரிழந்தாராம். இதையடுத்து, சடலத்தை அரசு தரப்பினருக்கு தெரிவிக்காமல் செவ்வாய்க்கிழமை அதிகாலை அருகேயுள்ள மயானத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரகசியமாக தகனம் செய்தனர்.இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கே. பாலு உள்பட கரியாப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இளைஞர் கொலை செய்யப்பட்டதும், கொலையை மறைத்து சடலத்தை எரித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் செட்டிப்புலம் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் முருகானந்தம், தந்தை சித்திரவேல், மற்றொரு சகோதரர் மணியன் மற்றும் அடையாளம் காணப்பட்ட 5 பேர் என மொத்தம் 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்திரவேல், மணியன், முருகானந்தம் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வருகின்றனர்.